Thursday, August 31, 2006

சொல்லால் அடித்த சுந்தரி! / காதல் பால்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
- அறத்துப்பால், அதிகாரம்: 13.அடக்கமுடைமை, குறள்: 129

‘தீயினால் சுட்ட புண்ணால் உருவான தழும்பு உடலில் மிச்சமிருந்தாலும் மனதில் அது ஆறிப்போகும். ஆனால் தீய சொல்லினால் உருவான தழும்பானது மனதில் ஒருபோதும் ஆறாது!’

‘கெட்டிமேளம்.. கெட்டிமேளம்!’

கல்யாணம். முடிந்தது முகூர்த்தம். அடுத்து சாந்தி முகூர்த்தம்..

பால் செம்புடனும் புதிதாக வந்து ஒட்டிக்கொண்ட அடர்வான நாணத்துடனும் அறைக்குள் காலடி எடுத்துவைக்கிறாள் அவள். உள்ளே.. காதல் கடந்த காமத்தோடு காத்திருக்கிறான் அவன்.

குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்கிறாள் அவள்.

“அய்யய்யோ! என்ன இது? உனக்கு வெட்கப்படக் கூடத் தெரியுமா?!”
- கிண்டலோடு கேட்கிறான் அவன். சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறாள்.

தோரணம் ‘தாம் தூம்’ என இருந்த கட்டிலில், விளிம்பில் அவன். அருகே சென்று நிற்கிறாள் அவள். அப்போதும் அவன் முகம் பார்க்கவில்லை. கட்டிலைப் போர்த்திக் கிடந்த மலர்க் கொடியைப் பார்த்தவாறே பால் செம்பை அவனிடம் நீட்டுகிறாள். அவள் பார்வை பட்ட அந்த மலர்கள் சொடுக்கிடும் நேரத்தில் விழித்து மலர்கின்றன.. ஆண் மலர்களாக இருக்கக் கூடும்!

பாலை வாங்கும் சாக்கில் அவள் கரத்தைத் தீண்டுகிறான் அவன்.
சுரீர்!
சிலிர்க்கிறாள் அவள்!

“ஏய்.. இங்க பார். என் முகத்தப் பார்த்து ஏதாச்சும் பேசு. நேத்துதான் பொண்ணு பார்த்து இன்னிக்கு கல்யாணமானமாதிரி அநியாயத்துக்கு டென்ஷனாகுறியே! நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தருக்கு ஒருத்தர் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டபோதே இதையெல்லாம் நான் தாண்டியாச்சு!”

அவன் வாய் இப்படி சொல்லியதே தவிர, குரல் கொஞ்சம் குழைந்துதான் இருந்தது.

ஒரே ஒரு மிடறு பாலைக் குடித்துவிட்டு செம்பை அவளிடம் நீட்டிகிறாள். அதை வாங்குகிற சாக்கில் அவனை ஏறிடுகிறாள் அவள். முகம் பூராவும் மூடுடன் அவன்!

பாலைப் பருக ஆரம்பிக்கிறாள். அடுத்தது அவனையா!

“போதும் போதும். முழுசாக் குடிக்கணும்னு கட்டாயமில்லை. வயிற்றை கொஞ்சம் காலியா வச்சுக்க. அப்பதான் வசதியா இருக்கும்” என்கிறான் நெட்டி முறித்தவாறே அவன்.

“ம்” சொல்கிறாள். செம்பை வைக்கிறாள். கொஞ்சம் சகஜமாகி விட்டாள். ஆனால் பேச வார்த்தைகள் இல்லை!

சடாரென எழுந்துவந்து அவள் இடையைப் பற்றுகிறான் அவன். தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. சிணுங்கலோடு சமாளிக்கிறாள். இடையை இணக்கமாக்குகிறாள்.

அப்படியே அவளைக் கட்டிலுக்குள் அழைத்துப் போகிறான் அவன். இருகக் கட்டியபடியே அவள் முகத்தை நுகர ஆரம்பிக்கிறான்.

முந்தைய கணம் வரை தன்னை மறந்திருந்தவள் அந்தத கணம் நிதானமாகிறாள்.. “அதுக்குள்ள என்ன அவசரம்? கிணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டுபோகப்போகுது?!”

‘சுருக்’கென தொட்டால் சிணுங்கி வேகத்தில் விலகுகிறான் அவன். கைகளைக் கட்டிக் கொள்கிறான். எதையோ தீவிரமாக யோசிக்கத் தொடங்கிவிட்டான்.

திடீர் வெறுமை சூழ்ந்தது! அதை உணர்ந்தும் கொண்டாள் அவள். லேசாகப் பதறுகிறாள்.. “என்னாச்சு கோவமா?”

“...”

“என்னங்க ஏதாச்சும் பிரச்னையா?”

“ம்.. இல்ல அந்த கோயில் மேட்டர் திடீர்னு ஞாபகத்துக்கு வந்துடுச்சு!”

“அத இன்னுமா மறக்கல நீங்க. ஆயிரம் தடவை ஸாரி கேட்டுட்டேன்லம்மா நான்” - அவன் முகத்தைக் கையில் தாங்கியபடியே பேசுகிறாள். முகம் வியர்க்கத் தொடங்கியிருக்கிறது!

அந்தக் கோயில் மேட்டர் அவள் நினைவுகளை ஆக்கிரமிக்கிறது..

யிலாப்பூர் கோயில். சாமி கும்பிட்டு, பிரகாரம் சுற்றி, மண்டபத்தில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள் பரஸ்பரம் பேசிவிட்டு, வெளியேறி, காலணி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கடைக்குப் போகும்போது தெருவோடு போன ஒரு கும்பல் விசிலடித்தது!

கும்பலில் ஒருவன் கூவினான்.. “இங்க பார்ரா.. சூப்பர் ஃபிகரு! ஹலோ மேடம் உங்க சைஸ் என்ன?”

கண்களில் நெருப்போடு திரும்பினான் அவள் கைகளைப் பற்றியபடியே நடந்த அவன். மொத்தம் ஆறு தடியர்கள். எதைக் குடித்திருந்தார்களோ.. நாற்றம் பிடுங்கியது. இரண்டு பேருக்கு முகத்தில் வெட்டுத் தழும்புகள்! தேர்ந்தெடுத்த ரவுடிகளாகத் தெரிந்தார்கள்.

“வா.. சீக்கிரம் நட. போயிடலாம்” என்றான் அவள் கரத்தை இறுக்கியபடியே!

“திமிர் பிடிச்சதுங்க. யாரும் தட்டிக் கேட்க மாட்டாங்கன்னு தைரியம்.” - முனகியவாறே நடந்தாள் அவள்.

பைக்கில் ஏறி உட்கார்ந்த பிறகும் அவள் கோபம் குறையவில்லை!

“இப்படி பயந்து ஓடி வந்திருக்கக் கூடாது நாம. ஆம்பளையா லட்சணமா நாலு சாத்து சாத்தியிருக்கணும் நீங்க”

“அவனுகளைப் பார்த்தியா.. ஆளும் முகரையும். கோர்ட் கேஸுக்கோ கொலைபாவத்துக்கோ பயப்படுற ஆளுங்களாத் தெரியல. மல்லுக்கட்டினா நமக்குத்தான் சங்கடம். சாக்கடையில காலை வச்சா நம்ம கால்தானே நாறும். அப்பா அம்மாக்குத் தெரியாம நாம கோயிலுக்கு வந்திருக்கோம் தெரியும்ல. அவனுகளை அடிக்கிறேன்னு போயி ஏதாச்சும் சிக்கலை இழுத்துக்கிட்டு அதனால நம்ம காதல் விஷயம் இப்பவே நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சு போயி..”

அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பேசினாள்.. “போதும்.. புலம்பலை நிறுத்திக்க. ச்சே! நீயெல்லாம் ஒரு ஆம்பளை!”

நிகழ்கால நினைவுகளுக்கு வரிகிறாள் அவள்.

“ப்ளீஸ்.. ஏதோ ஒரு எமோஷன்ல அப்படிக் கேட்டுட்டேன். இன்னும் அதை மறக்காம ஏன் இப்படி உங்களை வருத்திக்கிறீங்க? அன்னிக்கு உங்க இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். அதான் பிராக்டிகல்”

“இல்ல ஆம்பளையானு நீ கேட்டது..”

அவள் வழி மறிக்கிறாள்.. “தப்புதான். அதான் வாழ்நாள் பூரா உங்ககிட்ட மன்னிப்பு கேட்க இதோ வந்துட்டேனே. போதுமா”

ஏதோ பேச வாயெடுத்தான் அவன். மறுபடியும் வழி மறிக்கிறாள்..

“மூச்! ஒண்ணும் பேசப்படாது!” அதட்டிகிறாள். அடுத்த நொடியே அவன் வாய் திறந்து பேசாதிருக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கத் தொடங்குகிறாள்..

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு,
காதலில் கொடிது அது!

முந்தைய 'காதல் பால்'கள்: இங்கே

2 comments:

கார்த்திக் பிரபு said...

nalla iruku thalai ..thodarungal

ILA (a) இளா said...

//ஆறாதே நாவினால் சுட்ட வடு//
தவற்றை செய்துவிட்டு, காதலியிடம் மன்னிப்பு கேட்பது தேவை இல்லாததா?
தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் இல்லை. தனிமையில் மன்னிப்பு கேட்டால் அந்நியோன்யம் வளரும்னு என்கேயோ படிச்ச ஞாபகம்..