Monday, September 04, 2006

லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி

ஒரு முன் குறிப்பு:பலகீனமான இதயமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாமே!
.
ன் பைக் உதைபடவிருந்த அந்த விநாடியில் ஜோடியாக வந்து நின்றன இரண்டு வண்டிகள்.
.
"என்னாச்சு எல்லாரும் ஆபிஸைவிட்டு வெளியேரும்போது நீங்க என்னடான்னா புதுத் தக்காளிமாதிரி ஜம்னு புன்னகையோட வந்து நிற்குறீங்க?!" என்றேன்.
வந்தவர்கள் இருவரும் என் நண்பர்கள். அலுவலகத்தில் என் இருக்கைக்கு இடதும் வலதுமாக இருப்பவர்கள். முக்கியமாக ஒரு சங்கதி.. இருவரும் காதலர்கள்!
.
"ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு" என்றாள் அவள்.
.
"கொஞ்சற வேலையா?" என நான் அச்சுப்பிச்சுத் தனமாக ஜோக்'கடி'த்ததை அவர்கள் ரசித்தது மாதிரி தெரியவில்லை. அவர்கள் கவனம் வேறு எதிலோ இருந்தது!
.
"நல்ல வேளை 'ஜஸ்ட் மிஸ்'ல தப்பிச்சேன்!" என்றான் அவன்.
.
"ஏன்? என்னாச்சு?"
.
"வர்ற வழில ஒரு பார்ட்டி லிஃப்ட் கேட்டது. கொடுக்கலாம்னு நானும் என் பைக்கை ஓரம் கட்டினேன். அப்பத்தான் பார்த்தேன்.. அது ஒரு அலி! ஆம்பளை டிரெஸ், பொம்பள ஸ்டைல், ரெண்டுங்கெட்டான் தோற்றம். 'ஸாரி'னு சொல்லி கியரை மாத்திட்டேன். "
.
தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் அவன்.
எனக்கு லேசாக வருத்தம் எட்டிப்பார்த்தது.. "அப்படின்னா நீயாச்சும் லிஃப்ட் கொடுத்திருக்கலாமேம்மா" என்றேன் அவளிடம்.
.
'க்ளுக்'கெனச் சிரித்தாள் அவள். "என்ன கிண்டலா?" என்றாள்.
அந்த விநாடி என் நினைவுகள் பின்னோக்கிப் பறந்தன..
.
யரே பௌர்ணமி நிலா.
.
தொலைவில் தெரு நாய்களின் ஊளைச் சத்தம். ஊருக்கு ஒதுக்குப்புறமான குடிசைவீடு!
.
டூரிங் டாக்கீஸில் செகண்ட் ஷோ முடிந்து கூட்டம் கலைவதை,
நாய்களின் ஊளைச்சத்தம் உறுதிப்படுத்தியது.
.
என் கையைப் பிடித்துக் கூட்டிப் போனாள் அவள். வயதை யூகிக்க
முடியாதபடி வளர்ந்திருந்த அரவாணி!
குடிசைக்குள் இருவருமாக நுழைந்தோம்.
பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜ்ஜோதியாக ஒளிர்ந்தது உள்ளே.
.
நீளமான ஹால்போல இருந்த அந்தக் குடிசை வீட்டில், பனி மூட்டம் கட்டியது போல மண்டிக் கிடந்தது ஊதுபத்திப் புகை.
.
"வாங்க!'' - ஒருசேர வரவேற்றார்கள் ஏற்கனவே அங்கிருந்த ஆறு
அரவாணிகளும். பகல் வெளிச்சத்தில் பார்த்ததை விடவும் `பளபள'வென
இருந்தார்கள் அனைவரும்.
.
எனக்காகவே வாங்கிப் போட்டிருந்த பிளாஸ்டிக் சேரைக் கை
காட்டினார்கள். உட்கார்ந்தேன். கூரைக் குடிசையை அளவெடுத்தேன்
பார்வையில்.
.
சின்னதாக ஒரு பெண் தெய்வத்தின் போட்டோவை சுவற்றில் சாய்த்து
வைத்து, மாலை போட்டிருந்தார்கள்.
.
"அதுதான் எங்க சாமி. பௌஜ் மாத்தா'' என்றாள் என்னருகே வந்து
நின்றுகொண்ட `வழிகாட்டி' அரவாணி.
.
கட்டிக் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பு வெளிச்சத்தில் பௌஜ் மாத்தா பயமுறுத்தினாள்!
.
குடிசையின் நட்ட நடுவே ஆறடி நீளத்துக்கு ஆழமாக வெட்டப்
பட்டிருந்த குழியை அப்போதுதான் கவனித்தேன். தோண்டிக் குவித்த
மண்மேடு பீதி கொடுத்தது.
.
"என்ன வேண்ணாலும் நடக்கலாம் இல்லையா. அதான் குழி வெட்டிருவோம். வாச்சா போச்சா வாழ்க்கை'' -வழிகாட்டி சொன்னது புரியாததால் விளக்கம் கேட்டேன்.
.
சொன்னாள்... "ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுட்டா நறுக்குனதை வெத்தல, பாக்கு, பழம் சுத்தி அடக்கம் பண்ணுவோம். தப்புத் தண்டாவா நடந்துருச்சுன்னா
கண்ணும் காதும் வச்சமாதிரி சவத்த அடக்கம் பண்ணிருவோம். வாச்சா போச்சான்னா, `வந்தா வாழ்க்கை -போனா சாவு'ன்னு அர்த்தம்.''
.
"சரி சரி, வெரசா ஆகட்டும். நேரமாச்சு'' என குண்டோதரி சைஸில் இருந்த அந்த
தலைமை அரவாணி அதட்டல் போடவும், ஆளுக்கொரு வேலையில் ஈடுபட்டிருந்த ஆறு அரவாணிகளும் ஒன்று கூடினர்.
.
"கூட்டிட்டு வாங்கடி'' - குண்டோதரியின் குரலுக்குப் பணிந்து
என்னை அம்போவென விட்டுவிட்டு வெளியே ஓடினாள் வழிகாட்டி.
ஓரிரு நிமிடங்களில் அவள் திரும்ப வரும்போது கூடவே ஒரு இளைஞன்.
.
இருபது வயதிருக்கும் அவனுக்கு. மிரள மிரள வந்தான்.
அத்தனை அரவாணிகளும் அவனை மொய்த்துச் செல்லம் கொஞ்சினார்
கள். திருஷ்டி சுற்றினார்கள். தைரியம் சொன்னார்கள். ஆடைகளை அவிழ்த்தார்கள்!
வெட்டிய குழியின் விளிம்பில் அவனை நிறுத்தினார்கள்.
.
குழியை ஒரு சில விநாடிகள் குனிந்து பார்த்த அவன், நிமிர்ந்து எதிரே இருந்த என்னையும் பார்த்தான். `வெடுக்'கென தலை சிலுப்பிக் கொண்டான்.
.
வழிகாட்டி என்னருகே வந்தாள்... "பூஜை ஆரம்பமாகப் போவுது. உணர்ச்சிவசப்பட்றக் கூடாது. என்னோட பதினைஞ்சு வருஷ லைஃப்ல இப்படி ஒரு ஆள வேடிக்கை பார்க்க கூட்டி வர்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். கைல
கால்ல விழுந்து சம்மதிக்க வச்சிருக்கேன். இருந்தமா பார்த்தமான்னு எந்திருச்சு போயிரணும். போட்டோ கீட்டோ பிடிச்சாக்க... எங்காளுங்க பொல்லாதவளா
யிடுவாளுங்க.'' -சொல்லிவிட்டு ஜோதியில் கலந்தாள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தேன்.
.
"மாத்தா கி...ஜே, மாத்தா கி... ஜே!'' - பஜனைக் கோஷம் எடுத்த எடுப்பில் சூடுபிடித்தது.
.
கற்பூரம் தீரத்தீர புதுக் கற்பூரத்தை நெருப்புக்குள் செருகினாள் ஒரு அரவாணி.
.
உதிரிப்பூக்களைக் கிள்ளி பௌஜ் மாத்தாபடத்துக்குப் பூஜித்தாள் தலைமை
அரவாணி.
.
இரண்டு கைகளிலும் புகையும் ஊதுபத்திக் கொத்துகளைப் பிடித்தபடி அங்கும் இங்குமாக அலைந்தாள் வழிகாட்டி.
.
இன்னொரு அரவாணி மண்ணெண்ணெய் ஸ்டவ் பற்றவைத்து, நல்லெண்ணெய் நிரம்பிய அலுமினியப் பாத்திரத்தை அடுப்பின் தலையில் வைத்தாள்.
.
மற்ற மூன்று அரவாணிகளும் வெட்டப்பட்டிருந்த குழியின்
தலைமாட்டில் கால்களை விரித்தபடி நின்றிருந்த அந்த இளைஞனைச்
சுற்றி! இரண்டு தோள்களை இரண்டுபேரும், பின்புறம் நின்றபடியே கழுத்தை மூன்றாவது அரவாணியும் இறுகப் பிடித்திருந்தனர்.
.
"மாத்தா கி... ஜே, மாத்தா கி... ஜே!'' - நேரமாக ஆக பஜனைக்
குரலில் உக்கிரம்!
.
அரவாணிகளின் தலைகளில் செருகப்பட்டிருந்த பூச்சரங்கள் கலைந்து, தாறுமாறாகக் காற்றில் அல்லாடி அலைந்தன. உடலைச்சுற்றியிருந்த புடவை, உடலுடனான தொடர்பை அற்றுக்கொண்டு காற்றில் துழாவியது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
குரலும் கூக்குரலும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக்கொண்டே போனது. ஊர் மறந்து, உறவுகள் மறந்து, சுற்றி நடப்பதை மறந்து,அடிவயிற்றுக்குள்ளிருந்து கோஷம் போட்டான் அந்த இளைஞனும்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
கூரை கிழிய, தரை அதிர... கோஷமும் ஆட்டமும் தொடர்ந்து கொண்டிருந்த அதேநேரம் மாத்தாவின் படத்துக்குக் கீழே தண்ணீர்ப் பாத்திரத்தில் குளித்துக்
கொண்டிருந்த ஏதோ ஒரு பொருளைக் கையிலெடுத்தாள் குண்டோதரி
அரவாணி. விளக்கு ஒளியில் டாலடித்த அது... ஒரு ஆக்ஸா பிளேடு!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
நேரம் நெருங்கிவிட்டது போலும்! அத்தனை அரவாணிகளும் அதைப் புரிந்துகொண்டு விட்டதாகத் தெரிந்தது. இப்போது பாடலுடன் ஆடலும் சேர்ந்தது. கோஷமாய்ப் பாடியபடியே அந்த இளைஞனைச் சுற்றிச் சுற்றி
குதியாட்டம் போட ஆரம்பித்தனர்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`சொத்'தென்று அவன் நெஞ்சில் ஓங்கி அறைந்தாள் குண்டோதரி. அவளது மற்றொரு கையில் ஆக்ஸா பிளேடு!
.
சுற்றிச் சுற்றி மற்ற அரவாணிகள் அவன் முதுகில், தோள்களில்,
மார்பில், தொடைகளில் படார் படாரென அறைய ஆரம்பித்தனர். அத்தனை பேரும் கோஷம் போடுவதை மட்டும் நிறுத்துவதாயில்லை.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!'' மண்டியிட்டு அவன் அருகே உட்கார்ந்தாள் குண்டோதரி.
.
தன்னை மறந்த அமானுஷ்ய உணர்வில் இருப்பது போலத் தெரிந்தான் அந்த இளைஞன். தொடர்ந்து அடி வாங்கிய உடம்பு மரத்துப் போயிருக்கும்!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
மாத்தாவின் கண்களில் நிலை குத்திப் போயிருந்தன அவனது கண்களும். குபீரென `கெட்டிமேள' வேகமெடுத்தது பஜனைச் சத்தம்.
.
அந்த நொடியில்... தன் இடது கையில் அவனது ஆண் உறுப்பை `வெடுக்'கெனப் பற்றினாள் குண்டோதரி. பிளேடுடன் இருந்த வலக்கையை உயர்த்தினாள். இடது கை இழுத்துப் பிடித்தது. வலது கை... ஒரே இழு!
.
வேரோடு நறுக்கப்பட்ட ஆண் அடையாளம் கையோடு வந்தது!
கோஷமும் அடிகளும் வெறித்தனம் எடுத்தன.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
அவன் கால்களுக்கிடையே குவிக்கப்பட்டிருந்த மண்மேடுரத்தக் களறியானது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
குண்டோதரி நீட்டியதைக் `கண்'படாமல் கைகளில் வாங்கி, மஞ்சள் துணியில் சுற்றினாள் வழிகாட்டி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`அந்தப் பையனின் குரலில் மட்டும் உத்வேகம் வடிந்திருந்தது.
.
`வெட்டுப்பட்ட இடத்தின் வலியைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்காகத்தான்
மாறி மாறி அறைந்து உடம்பில் மத்த இடங்களிலும் வலி ஏற்படுத்துவோம்' என வழிகாட்டி அரவாணி ஏற்கெனவே சொன்னது நினைவுக்கு வந்தது.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
"பலமா அடிங்கடி. தூங்க விட்றாதீங்க. அப்புறம் உயிர் போயிரும்'' - அதட்டல் போட்டாள் குண்டோதரி. பளார் பளாரென அந்த அறுபட்ட ஆணின் முகத்திலும் அறைய ஆரம்பித்தனர் அரவாணிகள் அத்தனை பேரும்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
`தளதள'வெனக் கொதித்த எண்ணெய்ப் பாத்திரத்தைக் கரித்துணியால் எடுத்தாள் குண்டோதரி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
சூழ்ந்திருந்த அரவாணிகள் அவனை மண்மேட்டிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். .
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
கிழிந்த பாயில் படுக்க வைத்தார்கள்.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
"சுக்குத் தூளை எடுங்கடி'' -குண்டோதரியின் குரலைத் தொடர்ந்து, ஓரத்தில் இருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள் வழிகாட்டி. கை நிறைய சுக்குத்தூளை, அறுபட்ட இடத்தில் `பொத்'தென அடித்துப் பூசினாள்!
சுர்ர்ர்ர்ர்!
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
அப்படியே சுக்குத் தூள் கையால் அந்த இடத்தை கெட்டியாக அழுத்திப் பிடித்துக்கொண்டாள் வழிகாட்டி.
.
"மாத்தா கி... ஜே. மாத்தா கி... ஜே!''
.
மயக்கமும், முனகலும், எரிச்சலும், வலியுமாக... செருகிய கண்களுடன் கோஷத்தை முனகிக்கொண்டிருந்தான் அவன்.
.
"மா...த்...தா..கி...ஜே!''
.
தலைமுடியைப் பிடித்து உலுப்பினாள் குண்டோதரி... "தூங்காத ராசாத்தி. கண்ணுல்ல. கொஞ்ச நேரம் பொறுத்துக்க.'' -பேசியபடியே அவள் அடுத்துச் செய்த காரியம்...
.
கொதி கொதித்த நல்லெண்ணெயை டம்ளரில் மொண்டு அறுபட்ட அந்த இடத்தில் ஊற்றினாள்! கண்களை இறுக மூடிக்கொண்டு ஓரிரு விநாடிகளுக்கு
தலை சிலுப்பிப் பதறிக்கொண்டேன் நான்.
.
"இன்னும் கொஞ்சம்... ஊத்துக்கா'' என்று கெஞ்சினான் அவன்.
.
"எரிச்சலுக்கு எண்ணெயின் சூடு இதமாக இருக்கும்!'' - குரல் எனக்கு மிக அருகே கேட்டதும் கண்களைத் திறந்தேன். சுக்குத் தூளும், ரத்தச் சேறும் கலந்த
கலவைக் கையுடன் என்னை ஒட்டிக்கொண்டு வந்து நின்றாள் வழிகாட்டி அரவாணி.
.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் திண்டுக்கல் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவியான சேவியரம்மாவிடம் நான் பார்த்த குடிசை வீடு ஆபரேஷன் குறித்து மேல்விவரம் கேட்டேன்.
.
"மும்பை, திண்டுக்கல்னு ஒரு சில இடங்கள்ல வலியில்லாம ஆபரேஷன் மூலமா வெட்டி எடுக்குற அலோபதி டாக்டர்கள் இருக்காங்க. ஆனா அதுக்கு கொள்ளப்பணம் செலவாகும். அதாலதான் பெரும்பாலும் இப்படி நாங்களே அறுத்துக்குவோம்'' என்றார் காஷுவலாக.
.
"ஏன்?'' என்றதும் அவர் காட்டமாகச் சொன்னது இன்னும் என் காதுகளுக்குள்ளேயே இருக்கிறது..
.
"எங்களைக் கேட்டா? ஆம்பள உடம்போடயும் பொம்பள மனசோடயும் எங்களைப் படைச்ச அந்தக் கடவுளைத்தான் கேட்கணும்! எங்களுக்கு முறையா ஒரு அங்கீகாரம் கொடுத்து மனுஷியா மதிக்காத இந்த கவர்ன்மென்ட்டத்தான் கேட்கணும்.
.
நிம்மதியா டாய்லெட் போகக்கூட எங்களுக்கு உரிமை இல்லை. ஆம்பள கக்கூசுக்குள்ள போனா கிண்டல் பண்ணி மிரட்டுவானுக. பொம்பள கக்கூசுக்குள்ள போனா அருவருப்போடு விரட்டுவாளுக. இப்படி வெட்டிக்கிட்டா கொஞ்ச நஞ்சமா சுரக்குற ஆம்பள ஹார்மோன் சுத்தமா நின்னுரும். மாரெல்லாம் வளர்ந்து பொம்பளை ஷேப் ஆயிருவோம் நாங்க. தைரியமா பொம்பள டாய்லட்டுக்குள்ள போக முடியும்ல அப்புறம்!
.
அவ்வளவு என்னத்துக்கு.. ஆத்திரம் அவசரம்னு எப்பவாச்சும் நாங்க லிஃப்ட் கேட்டா பொம்பளைனு நினைச்சாவது எவனாவது வண்டிய நிறுத்துவான்ல!''

23 comments:

லக்கிலுக் said...

அண்ணே!

அன்னைக்கு நீங்க வார்த்தைகள்ல சொன்னதை விட இப்போ உங்க எழுத்துலே படிக்கறப்போ மனசு ரொம்ப வலிக்குது... இன்னைக்கு இரவு நிச்சயமா எனக்கு தூக்கம் வ‌ரப்போறது இல்லே....

சிறில் அலெக்ஸ் said...

பத்திரிகையாளர் என்பதை மறுபடியும் நிருபித்துவிட்டீர்கள். அருமையாய் ஒரு சமூக நிகழ்வை தலைப்போடு இணைத்துவிட்டீர்கள்.

நன்றாக வந்துள்ளது

Anonymous said...

பலமான இதயமுள்ளவர்களே அதிர்ச்சியடையும் சேதி இது. கடைசி லிப்ட் மட்டும் எனக்கு போட்டிக்காக இடைச்சொருகலாக படுகிறது.

இயல்பான நடைக்கும் சமூக அவலத்தை எழுத முனைந்ததற்கும் என் வாழ்த்துக்கள்

கதிர் said...

யப்பா! கடைசி வரை கண்ணை இமைக்க மறந்து வாசித்தேன். இத்தனை கொடூரம் எல்லாம் நடக்குமா.

நெல்லை சிவா said...

போனமுறை 'டச்சிங்' ஆக தந்திருந்தீர்கள், இம்முறை மிரட்டியிருக்கிறீர்கள்.

அரசு கவனிக்க வேண்டிய குறிக்கோளை முன்னிறுத்தி எழுதியிருப்பது சிறப்பு.

பத்திரிக்கையாளர் என்பதால், உங்களின் பிற பத்திரிக்கை மூலமாகவும் இம்மாதிரியான வேண்டுகோளை முன்னிறுத்தியிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

Santhosh said...

என்ன சொல்றதூன்னே தெரியலை ஹும்ம்...

லக்கிலுக் said...

இப்போதைக்கு தமிழ்மண ஸ்டார் குத்தியிருக்கேன்.... தேன் கூடு போட்டியின் போது ஓட்டாக குத்துகிறேன்....

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by a blog administrator.
லிவிங் ஸ்மைல் said...

thanks

வினையூக்கி said...

//இப்போதைக்கு தமிழ்மண ஸ்டார் குத்தியிருக்கேன்.... தேன் கூடு போட்டியின் போது ஓட்டாக குத்துகிறேன்....

//

பழூர் கார்த்தி said...

//இயல்பான நடைக்கும் சமூக அவலத்தை எழுத முனைந்ததற்கும் என் வாழ்த்துக்கள்//

வழிமொழிகிறேன் ! பாராட்டுக்கள் !

***

ரொம்ப நேர்த்தியா விவரிச்சி இருக்கீங்க, சற்று பிசகினாலும் ஆபாச முத்திரை குத்தப்பட்டு விடக்கூடிய நிகழ்வில் தேவைக்கதிகமான வர்ணனைகளோ, உரையாடல்களோ இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது பிடித்தது !

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள்

வலைஞன் said...

ஏற்கனவே ஒரு அரவாணியிடம் பேட்டி கண்டபோது அறிந்த விஷயம் தான் என்றாலும் நேர்முக வர்ணனை போல நீங்கள் எழுதியிருப்பது படித்தபோது மனம் அதிர்ந்தது உண்மை.

கார்த்திக் பிரபு said...

nan innnum padikalai copy panni vaithrukane.padichiitu en pinootathai podurane

கார்த்திக் பிரபு said...

living smile enna comment potrundhanga ? ean remove panniteenga?

and kadhaiyai padithu vittane..theriyadha vishyam therindhu kondane..aanal thalaipirkaga andha kadaisi line add panniyadhu konjam idikiradhu..ini onnum pannu mudiyadhu parava illai

and indha time nan padiha kadhaigalil ungalodadhu ippodhaikku topu..pinathal sureshum nalla pannirukara..parklama vera yaravdhu bettera panranagalannu!!!!!

Jazeela said...

அதிர்ச்சியில் பின்னூட்டம் போடக்கூட கை நடுங்கத்தான் செய்கிறது. அரசாங்கம் இவர்களுக்கு ஒரு விமோச்சனம் தந்து அவர்கள் வாழ்க்கையை 'லிஃப்ட்' (உயர்த்தினால்) செய்தால் நன்றாக இருக்கும்.

லிவிங் ஸ்மைல் said...

கார்த்திக் பிரபு said...
//living smile enna comment potrundhanga ? ean remove panniteenga?//

ஒன்னுமில்ல thanks சொல்லிருந்தேன். அதை publish பண்ண தாமதாமானதில் சரி நம்ம systemல தான் problem(வழக்கம் போல)னு நெனச்சு திரும்ப பொட்டேன்...

கடைசில அவர் ரெண்டு thanks சேர்த்து publish பண்ணிட்டாரு...

அதான் ஒன்ன நான் டெலிட் பண்ணீட்டேன்...

Anonymous said...

after reading this i really pity about them.I want to curse the God for this type of creation.

ILA (a) இளா said...

ஒரு திகில் அனுபவம். தலைப்புக்கு ஏத்த மாதிரி மட்டும், கடைசி வரி. வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

ரத்தம் நிஜமாகவே உறைகிறது.
கடவுள் இப்படி இவங்களுக்கு ஒரு வழி செய்யாமல்
இப்படி விட்டுவிட்டாரே.
தாங்களெ தங்கள் வழியைத் தேர்ந்து எடுப்பதால் நல்ல் ஒளி கிடைக்க வேண்டும் இவர்களுக்கு.
வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

எழுத்தாளர் சமுத்திரம் அவர்கள் எழுதிய ஜாதி மல்லி கதை ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

வல்லமை தாராயோ, இம்மாதிரி மானுடர் வாழ்வதற்கே, சொல்லடி சிவசக்தி. மனசு கனத்தது, லிfட் இடைசொருகல் போலிருந்தாலும், நல்ல சமுடாய நோக்கு கொண்ட செய்தியை, பரபரப்பாகவும் நல்ல ஓட்டத்துடன் சொன்னதுக்கு ஒரு 'ஓட்டு'

Anonymous said...

ஜி,

உங்கள் படைப்பை வாசித்ததில் எனக்குப் தோன்றியது...

Athisha said...

அப்ப்பா.. பயங்கரம்!