Tuesday, August 29, 2006

ரங்கராட்டினம்! / காதல் பால்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
- அறத்துப்பால், அதிகாரம்: 30.வாய்மை, குறள்: 293


பொய்யென அறிந்த ஒன்றை பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை என எண்ணி ஒருவன் மறறத்தால் அவனது நெஞ்சே அவனை வருத்தும், வாட்டும்

.ஆர்.ரகுமானின் இசைப்புயல் அவனது மொபைல் போனில்!

எடுத்துப் பார்த்தான். வீட்டிலிருந்து அவன் மனைவி அழைத்துக் கொண்டிருந்தாள். எடுத்தான்.

“நான்தாங்க. சாயந்திரம் வர்றப்ப ஏ.டி.எம்.ல பணம் எடுத்துட்டு வர மறந்துடாதிங்க. எனக்கு பர்த்டே புடவை வாங்க தி.நகர் போகணும்!”

எரிச்சலோடு சொன்னான்... “சரி சரி”

எரிச்சலுக்கு அவன் தரப்புக் காரணம் அவளது அறியாமை. ‘கிரெடிட் கார்டுல வாங்கிட்டு, அப்புறம் பணம் கட்டிக்கலாம். அம்பது நாளுக்குள்ல கட்டிட்டா வட்டியே கிடையாது’ என அவன் சொல்வதை அவள் எப்போதுமே புரிந்து கொள்வதில்லை! கார்டைத் தேய்த்தாலே கடன் பூதம் வந்து பயமுறுத்துவதாக அவள் நினைப்பு!

‘ச்’சுக் கொட்டியபடியே கம்ப்யூட்டர் திரையைப்பார்த்தவன் அந்த நிமிடம் வந்து விழுந்திருந்த மெயிலைக் ‘க்ளிக்’கினான்.

‘ஹாய்! எப்டி இருக்கடா? நான்தான் வித்யா. காலேஜ்ல உன் ப்ராஜக்ட் மேட். நீதான் கிண்டல் பண்ணுவியே.. அதே தெத்துப் பல் அழகி!’

‘குபுக்’கென அவன் முகத்தில் பல்பு பிரகாசம்! ஃபேர்வெல் அன்று ஒரே நாளில் மட்டுமே பதினாறு லவ் லெட்டர்களை ரிஜெக்ட் செய்த அதி அழகி வித்யா மனசுக்குள் பாய்ந்து உட்கார்ந்தாள்! மறக்க முடியுமா அவளை!

கல்லூரிக் கட்டழகர்கள் அனைவரும் அவளது கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்க, சதா அவனையே வலம் வந்து கொண்டிருந்தவள். அன்பையும் நட்பையும் அள்ளிக் கொடுத்தவள். இருவரையும் சேர்த்துவைத்து கல்லூரிக் கிசுகிசுக்கள் கிளம்பியபோது லேசாக அவனுக்குள்ளும் காதல் ஆசை வந்தது. ஆனால் ‘எங்களுக்குள் காதல் இல்லை. நாங்கள் திக் ஃப்ரெண்ட்ஸ்’ என அறிவித்து அவனது மூக்கையும் உடைத்தாள் அவள்!

அந்த நிமிடம் முதல் அவன் மனக்குரங்கு மாறிவிட்டது! ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பு மழை நேரக் கவிதை போல அருமையான ஒன்றுதான். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கேனும் காதல் கனவு வந்துவிடுமானால் அந்த விநாடியில் இருந்து அந்த அருமை தொலைந்து போய்விடுகிறதே!

எந்த நேரத்திலாவது அவள் மனசு மாறிவிடாதா, ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட மாட்டாளா என்ற நப்பாசையிலேயே அவனது கல்லூரிக்காலமும் முடிந்து போனது. அதன் பிறகு காலம் தன் வேலையைச் செய்தது. அவள் வெளிநாட்டுக்குப் பறந்தாள் உயர் படிப்புக்காக. அவன் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு வந்து விட்டான். அத்தோடு போச்சு அவர்கள் தோழமை.

இதோ பல வருடங்கள் கழித்து அவள் வந்திருக்கிறாள்!

தொக்கி நின்ற அவனது நப்பாசை மறுபடியும் விழித்துக்கொண்டது! ஆம்பளைக்குணம்!!

பதில் மெயிலினான்.. ‘எங்கிருக்கே வித்யா?’

‘இங்கதான் சிங்காரச் சென்னைல. உன்ட்ட பேசணும் நிறைய்ய. மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர் எல்லாம் கொடுடா’ என பதிலுக்குப் பதில் கொடுத்தாள் அவள். நம்பர்களை அனுப்பினான். அடுத்த நிமிடமே அவள் பேசினாள்.

“சென்னை வந்து ஒரு வாரமாகுது. ஹஸ்பெண்ட் லண்டன்ல. அங்கதான் நானும் வொர்க் பண்றேன். இங்க அம்மாக்கு ஒரு ஆபரேஷன் அடுத்தவாரம். கூட இருக்கணும்னு தோணுச்சு. ஒரு மாசம் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன். எவ்ளோ சிரமப்பட்டு உன் மெயில் ஐ.டி.யப் பிடிச்சேன் தெரியுமா. எத்தன வருஷமாச்சு உன்னப்பார்த்து! வரியா? வீட்ல யாருமில்ல, மாங்காடு கோயிலுக்குப் போகியிருக்காங்க”

அவளது ‘வீட்ல யாருமில்ல’ அவன் மனக்குரங்குக்கு தீனி போட்டது. “ஆபிஸ் முடிஞ்சதும் ஓடி வரேன்” என்றான் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்! மனைவியை மறந்தான்!

வித்யாவின் வீட்டைக் கண்டுபிடித்து வாசலில் நிற்கும்போது மொபைல் போன் அலறியது. மனைவிதான். எடுத்து அவளைப் பேசவிடாமல் அவனே பேசினான்.. “அர்ஜெண்ட் மீட்டிங். எம்.டி. வீட்டுக்குப் போயிட்டிருக்கேன். வர லேட் ஆகும். நாளைக்கு ட்ரெஸ் வாங்கிக்கலாம்”

அவள் பேச்சைக் கேட்கக்கூட மாட்டாமல் போனைக் கட் செய்தான். வித்யா வீட்டின் காலிங் பெல் அடித்தான்.

கதவு திறந்தது அவள்தான். முகமெல்லாம் புன்னகையோடு வரவேற்றாள். அழகு கூடியிருந்தாள்.

“தொப்பை கொஞ்சம் போட்ருக்கே. மத்தபடி நீ அப்டியேதான் இருக்கே” என்றாள். அவனது இளம் தொப்பையில் கிண்டலாகக் குத்தினாள். ரங்க ராட்டினம் சுற்றியது அவனுக்குள். அதைக் கலைக்கும் விதமாக மொபைல் அலறியது!

எடுத்துப்பார்த்தான். வீட்டிலிருந்து! எரிச்சலோடு கட் பண்ணினான். “ஜி.எம். பேசறாரு. இருபத்தி நாலு மணி நேரமும் ஆபிஸ் வேலையே பார்த்துட்டிருக்க முடியுமா!” என வித்யாவிடம் கூசாமல் சொன்னான்.

“கூல் மேன். என்ன குடிக்குறெ? காபி? கூல்ட்ரிங்க்? இல்ல பியர்?” - கண்ணடித்தாள் அவள். அசடு வழிந்தான் அவன். “காபி” சொன்னான்.

அவள் சமையலறைக்குள் போனதும் மறுபடியும் அலறியது மொபைல். வீட்டிலிருந்துதான். கட் பண்ணினான். தொடர்ந்து போனை ஆஃப் பண்ணினான்!

காபியோடு வந்தாள் வித்யா. “எப்டி இருக்கு என் கை பட்ட உங்க ஊர் காபி. குடிச்சுச் சொல்லு!” என்றவாறே நீட்டினாள். ஜிலுஜிலுப்போடு வாங்கினான்.

அவள் வீட்டு டெலிபோன் அழைத்தது. ஓடிப்போய் எடுத்தாள். மலர்ந்த முகத்தோடு பேசினாள்.. “ம்.. ஐயா வந்தாச்சு. நீங்கதான் வரமாட்டேன்னுட்டிங்க. ஞாபகம் வச்சுக்கங்க. சண்டே என்ட்ட இருந்து தப்பிக்க முடியாது, ஆமா! பேசுறீங்களா?” என்றவள், அவனை அருகே அழைத்து ரிசீவரைக் கொடுத்தாள்.

உள்ளங்கையில் வியர்வைக் கசிவுடன் வாங்கினான்.. “ஹலோ”

மறுபக்கம் அவன் மனைவி நிம்மதிப் பெருமூச்சுடன் பேசினாள்.. “போய்ட்டீங்களா.. அப்பாடா! வித்யா எனக்கு மத்தியானமே பேசினாங்க. காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டாங்க. உங்களை சாயந்திரம் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கதச் சொல்லி, என்னையும் கூப்பிட்டாங்க. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு கேட்டுக்கிட்டாங்க. ‘வீட்ல வேலை இருக்கு. ஞாயித்துக் கிழமை வரேன்’னு சொல்லிட்டேன். நீங்க ஃப்ரெண்ட்ஸ்.. பல வருஷம் கழிச்சு மீட் பண்றிங்க. என்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு சகஜமா பேசமுடியாம இருக்குமேன்னுதான் நான் வரலைன்னுட்டேன். விஷயத்த உங்ககிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன். பேட்டரி தீர்ந்துடுச்சா? எங்கே உங்க எம்.டி.கிட்ட மாட்டிக்கிட்டிங்களோன்னு பதறிட்டேன். இன்கமிங் கால் லிஸ்ட்ல வித்யாவோட வீட்டு நம்பர் பார்த்து போன் செஞ்சேன். நீங்க எனக்காக வருத்தப் படாதிங்க. நாம நாளைக்குப் போய் புடவை வாங்கிக்கலாம். உங்க மேல நல்ல பாசம் வச்சிருக்காங்க. அவங்க அம்மாவுக்கு ஆபரேஷனாம். ஆதரவா பேசிட்டு வாங்க.”

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்,
காதல் கெடும்!

முந்தைய 'காதல் பால்'கள்:

3 comments:

Anonymous said...

தூர்தர்ஷனின் செவ்வாய்கிழமை நாடக பாணி முடிவைத்தவிர , its a well written story Gowtham. ;)

-- Vignesh

யாத்ரீகன் said...

wonderfull!!

Anu said...

too much..
i feel so sad for the innocent wife.