Tuesday, September 26, 2006

ம்க்கும்! இதுவும் வேணும்... / காதல் பால்



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

-அறத்துப்பால், அதிகாரம்: 29. கள்ளாமை, குறள்: 283

பிறரை வஞ்சித்தலால் உண்டாகும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும், இறுதியில் அளவு கடந்த அழிவையே தரும்.

ல்லூரியின் எல்லா வகுப்புகளிலும் பாடம் நடத்தப்படும் சத்தமும் கூடவே கொட்டாவிக் குரல்களும். அவளும் தோழியும் மட்டும் யாருமில்லா மரத்தடியில் நின்று கொண்டிருந்தனர்!

“சொல்டி.. அப்டியென்னடி அவசர தகவல்? எதுக்காக இப்டி டென்ஷனோட இருக்கே?” என்றாள் தோழி.

விரல் நக விளிம்பைக் கடித்தபடியே பேசினாள் அவள்.. “இல்ல, நான் சொல்றத வேற யார்கிட்டயும் சொல்லிடக்கூடாது”

“அடச்சீ! சொல்டி கழுதை. எம்மேல அவ்வளவுதானா நம்பிக்கை! நீ கொலையே செஞ்சிருந்தாக்கூட வெளிய சொல்லமாட்டேன், போதுமா?”

“தேங்க்ஸ்டி” என்றவள் தொடர்ந்து தயக்கத்துடன் பேசலானாள்.. “போட்டிக்கு நீ அனுப்பிய கவிதையை எனக்காக விட்டுக் கொடுக்கணும்”

“புரியலயேடி, தமிழ் மன்றம் நடத்துற போட்டிக்காக நான் புனை பெயர்ல எழுதி அனுப்பிய கவிதையையா?”

“கரெக்ட். அது நீ எழுதுனதுதான்னு உனக்கும் எனக்கும் மட்டும்தானே தெரியும்?”

“ஆமா. ‘புனை பெயர்ல எழுதி அனுப்பு. பரிசு கிடைச்சா டிக்ளேர் பண்ணிக்கலாம்’னு நீ கொடுத்த ஐடியாதானேடி அது”

“அதேதான். அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு!”

“வாவ்!” - உற்சாகத்தில் துள்ளி, அடுத்த விநாடியே சுதி குறைந்தாள் தோழி.. “இப்ப என்ன பண்ணனும் நான்?”

உர் முகத்தோடு சொன்னாள் அவள்.. “அந்தக் கவிதைய எழுதினது நீதான்ங்கிறதை மறந்துடனும். நான் பரிசை வாங்கிக்கறேன்”

“அவ்வளவுதானே.. சரி, மறந்துட்டேன்” என காஷூவலாகச் சொன்னாள் தோழி. சின்ன யோசனையோடு தொடர்ந்தாள்.. “வேணும்னா அவன்கிட்ட மட்டும் நான்தான் எழுதினேன்னு சொல்லிக்கவா? ஏன்னா அந்தக் காதல் கவிதையை அவனை மனசுல வச்சுக்கிட்டுதான்டி எழுதினேன்.”

முகம் கருத்தாள் அவள். பிரச்னையே அவன்தானே! அவன்?

ஆரம்பகாலத்து அரவிந்தசாமி போல அழகான வாலிபன். கல்லூரியில் எல்லாப் பெண்களையுமே ஏங்கவைக்கும் இளைஞன். அவனோடு ஒரு வார்த்தையாவது பேச மாட்டோமா என லேடி புரஃபசர்களே தவம் கிடப்பதுண்டு! அப்படியே பேசினாலும் ‘ஆம், இல்லை, தெரியாது’ என்றுதான் அவன் பெரும்பாலும் பேசுவான். அப்படி ஒரு சங்கோஜி! கல்லூரி தமிழ் மன்றத்தின் செயலாளரும் அவனே.

அவனை ஒருதலையாக காதலிக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றிச் சொச்சம் பெண்களில் அவளும் அந்தத் தோழியும்கூட அடக்கம்.

அவனை அசத்தும் நோக்கத்துடனேயே கவிதை எழுதி போட்டிக்கான பெட்டியில் போட்டிருந்தாள் தோழி. அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கொடுத்த செய்தியை அறிவிப்பாக நோட்டிஸ் போர்டில் வெளியிட்டிருந்தார்கள். செயலாளர் என்ற முறையில் கவிதையை அழகாக விமர்சித்து, ‘புனை பெயரில் எழுதியிருப்பவரை நான் நேரில் தமிழ் மன்றம் ஆவலாக இருக்கிறது, நானும் கூட!’ என்று குறிப்பிட்டிருந்தான் அவன்.

அவனது அபிமானத்தைப் பெற துடிப்போடு இருந்த அவள் இந்த வாய்ப்பை கனகச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள். “ம்ஹூம். யார்கிட்டயும் சொல்லக்கூடாது. என் புனைப்பெயரில் நான் எழுதி அனுப்பிய கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைச்சிருக்கு. அதை வேணும்னா நீ எழுதினதாச் சொல்லிக்க” என்றாள்.

‘எவ்வளவு பெரிய அநியாயம் இது. சர்வ சாதாரணமாகச் சொல்கிறாளே. இதற்கு முன் இவள் இப்படியெல்லாம் சின்னத்தனமாக நடந்து கொண்டதில்லையே!’ என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்த தோழி, வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையசைத்தாள். பாவம், காதல் வெறி எவ்வளவு சின்னத்தனத்தையும் செய்யவைக்கும் என்பதை தோழி அறிந்திருக்கவில்லை.

முதல் சந்திப்பு அசத்தலாக அரங்கேறியது!

அறையில் அவனும் அவளும் மட்டுமே. வெட்கப் பெருமிதத்தோடு “அது நான் எழுதிய கவிதைதான்” என வெட்கமே இல்லாமல் சொன்னாள் அவள்.

“அட்டகாசமான கரு. அதைவிட அட்டகாசமான நடை. வாழ்த்துக்கள்” என்றவன், அனிச்சையாகக் கை குலுக்கினான். சிலிர்ப்பு அவளுக்குள் பரவிக் கிளைத்தது! சுதாரித்துக் கொண்டு தூண்டில் வீசினாள்.. “வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா?”

சட்டென வெட்கம் முளைத்தது அவனுக்கும். ஆண் வெட்கப்பட்டால்கூட அழகுதான் போலிருக்கிறது!

“ஈவினிங் நாலு மணிக்கு ஃப்ரீயா இருந்தா வாங்க கேண்டீன் போகலாம்” என்றான்.

மாலை மணி நான்கு. கேண்டீனில் எதிரெதிரே இருவரும்.
ஒரு பெண்ணுடன் அவன் இருப்பதை கேண்டீனே ஆச்சர்யத்தோடு பார்த்தது!

ஆச்சர்யங்களை ஓரக்கண்ணால் ரசித்தபடியே அவனையும் ரசித்தாள் அவள்.

“என் கவிதையை வார்த்தைக்கு வார்த்தையா ரசிச்சு விமர்சனம் பண்றிங்களே, கவிதைன்னா உங்களுக்கு அவ்வளவு பிரியமா?” என்றாள்.

“அந்தக் கவிதையை எனக்காக எழுதின கடிதம் மாதிரி உணர்ந்துக்கிட்டேன்.” என்றான் அவன்.

பழம் நழுவி பாலில் விழ ஆரம்பித்திருப்பதை புரிந்து கொண்டாள் அவள். இவ்வளவு சீக்கிரம் அது விழும் என அவளே எதிர்பார்த்திருக்கவில்லை!

“நீங்க யாரையாச்சும் காதலிக்கிறீங்களா?” என்று நேரடியாகவே கேட்டான் அவன்.

அவளும் நேரடியாகவே சொன்னாள்.. “இல்லை. உங்களை மாதிரி ஒரு ஹேண்ட்ஸம்முக்காக காத்திருக்கிறேன்”

அவனும் நோக்க, அவளும் நோக்க, சுற்றி இருந்த கேண்டீன்வாலாக்களும் நோக்க காதல் பட்டாசு வெடிச்சாச்சு!

டுத்த சந்திப்பு கடற்கரையில்.

கல்லூரியில் இத்தனை நாளாக ஊமைக்கோட்டானாக வலம் வந்த அவனை லொடலொட பேச்சாளனாகப் பார்க்க அவளுக்கே புதிதாக இருந்தது!

“ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?” என்றாள்.

“ம்.. கேளு” என்றான்.

“இதுவரை யாரையுமே நீங்க லவ் பண்ணினதில்லையா?”

சிரித்தான் அவன்.. “இல்ல்ல்லை! நீதான் முதல் ஆள்”

று மாதங்கள்.. இருபது நாட்கள்.. இருபத்தியோரு மணிகள்.. இரண்டு நிமிடங்கள்.. ஏழரை விநாடிகள் கடந்து அந்த எட்டாவது நொடியில் பால் செம்போடு முதல் இரவு அறைக்குள் நுழைந்தாள் அவள்!

உள்ளே.. காலியாக இருந்தது கட்டில்! ஒருகணம் செய்வதறியாமல் திகைத்தாள்!

கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்த அவன், திடீரென ஓடிவந்து அவளை இருகக் கட்டிக் கொண்டான். வெட்கத்தோடு திமிறினாள் அவள்.

“என்ன இது விளையாட்டு, ச்சீ!” என சிணுங்கினாள்.

“இதென்ன விளையாட்டு, இப்பப் பாரு” என்றபடியே அவளை அலேக்காகத்தூக்கினான். கட்டிலுக்குக் கொண்டு போனான்.

“அட அதுக்குள்ள என்ன அவசரம். நான் வெட்கத்தைவிட்டு நிறைய பேசணும்னு ஆசையா வந்திருக்..” - அவள் பேசியதை அவன் கேட்கும் மனநிலையில் இல்லை. வெறி கொண்ட சிங்கமாக பாய்ந்தான்.

விடிய விடிய அவளை எதுவுமே பேசவிடவில்லை அவன். விதம் விதமாக அனுபவித்தான். விடிந்த பிறகும் விடுவதாயில்லை!

உடலும் மனதும் நிரம்பி வழியும் வலியோடு கிடந்தாள் அவள். அவள்மீது அவன். அவனது ராட்சஸ நடவடிக்கைகளால் மிரண்டு போயிருந்தாள் அவள்.

“ச்சே! என்ன பொண்ணு நீ, உன் வயசுக்கு என்னமா கம்பெனி கொடுக்கணும்! நீ என்னடான்னா இப்படி மிரள்றியே?” என எரிந்து விழுந்தான் அவன்.

அப்போதுதான் அவளுக்கும் பேச வாய்ப்புக் கிடைத்தது..“இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணலேன்னு சொன்னீங்களே அன்னிக்கு”

அவன் சொன்னான்.. “ஆமா லவ் பண்ணலேன்னுதானே சொன்னேன். அனுபவிச்சதில்லேன்னா சொன்னேன்”

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்,
களவுக் காதலும்!

முந்தைய 'காதல் பால்'கள்: இங்கே!


7 comments:

இராம்/Raam said...

கெளதம்,

இந்த குறளுக்கு இப்பிடி ஒரு கதையா...

கொஞ்சம் தடாலடி!?யா தான் இருக்கு.

Leo Suresh said...

சரியாத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் தடாலடி கெளதம் என்று,நல்லாயிருந்தது.

லியோ சுரேஷ்
துபாய்

Anonymous said...

அய்யோ...! அய்யோ...! திருக்குறளுக்கு இப்படியொரு சோதனையா?

ILA (a) இளா said...

சொம்மா சொல்லக்கூடாது, கடைசி வரியிலதான் இருக்குது கதையே. குறளும் விளக்கமும் அருமையிலும் அருமை.

Unknown said...

தடாலடி கதை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கதாநாயகனை வில்லனாக்கிட்டீங்களே கௌதம்..

Anonymous said...

loosu gowtham